‘ஐஸ்’ போதைப் பொருள் கடத்தல்.! ஒருவர் கைது
கடவத்தையில் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சிறப்பு சுற்றிவளைப்பில் பெருமளவிலான ‘ஐஸ்’ வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (19) கடவத்தை, புனித அந்திரேயா அக்வில்லினோ தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியொன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட நிலையில் சுமார் 6 கிலோ 288 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் சந்தை பெறுமதி 10 கோடி ரூபாயை விட அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 38 வயதுடையவர் எனவும், கணேமுல்ல, கேந்தலியத்தபாலுவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கும்பல் தலைவர்கள் ‘பொடி சுரேஷ்’ மற்றும் ‘சங்க சமீர’ ஆகியோரின் இலங்கை வலையமைப்பை இயக்கும் முக்கிய நபராக செயல்பட்டதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் எடைபோட பயன்படுத்தப்பட்ட மின்சார தராசு, கடத்தல் பணம் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

